Monday, July 02, 2007

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை 'கெசட்'டில் வெளியிட விழுப்புரம் ம.தி.மு.க., மண்டல மாநாட்டில் வலியுறுத்தல்




விழுப்புரம் : 'காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் வெளியிட வேண்டும்' என்பன உள்ளிட்ட 24 தீர்மானங்கள் விழுப்புரத்தில் நடந்த ம.தி.மு.க., மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.




விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலை முத்தாம்பாளையத்தில் ம.தி.மு.க., மண்டல மாநாடு நேற்று காலை துவங்கியது. பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:


மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக மாநில கட்சிகளின் ஆதரவுடன் அரசு இயங்கி வருகிறது. மக்களின் தனித்தன்மையை பாதுகாக்க காங்கிரஸ் தவறி விட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் வெளியிட வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணைகட்டும் திட்டத்தை தடை செய்ய வேண்டும். முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும். பாலாற்றின் குறுக்கே அணை கட்டினால் வட தமிழகம் பாலை வனமாகும். அந்த அபாயத்தை தடுக்க வேண்டும். நதிநீர் வாரியம் அமைக்க வேண்டும்.
இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யக் கூடாது. ஈழத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு, மருந்துப் பொருட்களை அனுப்ப அனுமதி தர வேண்டும். சில்லரை வணிகத்தில் அயல்நாட்டு முதலீட்டை தடை செய்ய வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. இணையதள வணிகத்தை தடை செய்ய வேண்டும். மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்களின் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும். கரும்பு விவசாயிகளின் நலனை காக்க வேண்டும். சென்னை - விழுப்புரம் இடையே மின்சார ரயில் இயக்க வேண்டும். சென்னை - தூத்துக்குடி இடையே இரட்டை ரயில்பாதை அமைக்க வேண்டும்.


அமெரிக்க அணுசக்தி போர் கப்பல் சென்னை வருவதை அனுமதிக்க கூடாது. கரும்புக்கான விலையை டன் ஒன்றுக்கு ரூ.இரண்டாயிரம் என்று நிர்ணயம் செய்ய வேண்டும். குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மலர் வெளியீடு: மாநாட்டின் முற்பகல் நிகழ்ச்சி 12.55 மணிக்கு நிறைவு பெற்றது. அப்போது, மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. மாநாட்டு மலரை திருவண்ணாமலை மாவட்ட செயலர் ஆரணி ராஜா வெளியிட்டார். கலைப்புலி தாணு பெற்றுக் கொண்டார்.



தூத்துக்குடி செயற்குழு உறுப்பினர் காயாம்பு எழுதிய, 'முதுமை ஒரு சுவையே' என்ற நூலை வைகோ வெளியிட ஆரணி ராஜா பெற்றுக் கொண்டார். செல்லூர் தயாநிதி நூலை தமிழ்மறவன் வெளியிட பாலவாக்கம் சோமு பெற்றுக் கொண்டார். விநாயகா ரமேஷ் தயார் செய்த, 'சங்கொலி' தொகுப்பை தென்சென்னை மாவட்ட செயலர் வேளச்சேரி மணிமாறன் வெளியிட செங்கை மாவட்ட செயலர் செங்குட்டுவன் பெற்றுக் கொண்டார். மாநாட்டில், 'தாயகம் மறுமலர்ச்சி காண அவசரத் தேவை அரசியல் மாற்றமா? சமுதாய மாற்றமா? என்ற தலைப்பில் நாஞ்சில் சம்பத்தை நடுவராக கொண்ட பட்டிமன்றம் நடந்தது.




செய்தி: தினமலர்

0 Comments:

Post a Comment

<< Home