Saturday, December 23, 2006

எல்.கணேசனும், செஞ்சியாரும் வெளியேற்றபடுவர்.

அதிருப்தி தலைவர்களுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியிருப்பதால அவர்கள் தனித்து விடப்படும் சூழ்நிலையும் எழுந்துள்ளது. தற்போது கட்சியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு குறித்து ம.தி.மு.க., மாவட்டச் செயலர்களிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம்:

ஜீவன்(வடசென்னை):ம.தி.மு.க.,வில் வைகோவைத் தவிர வேறு எவனும் முக்கியம் கிடையாது. கட்சியை உடைக்க யார் நினைத்தாலும் அவர்கள் தலையில் மண் விழும். எங்கள் மாவட்டத்தில் கட்சிக்கு சிறு சேதாரம் கூட வராது. வைகோவை நம்பி வந்தவர்கள் தற்போது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டு விட்டனர். மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு இப்போது செயல்படுகின்றனர். மாவட்டச் செயலர்கள் கூட்டத்தின் போது எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இரண்டு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துவேன். கடந்த 93ம் ஆண்டு தண்டபாணி சிதைக்கு தீ மூட்டிவிட்டு வைகோ பேசும்போது, "என்னுடன் வந்தால் பதவிகள் கிடைக்காது. துன்பமும் துயரமும் சிறைச்சாலையும் பரிசாக கிடைக்கும்' என்று பேசினார். பதவி வாங்க நினைத்தவர்கள் அன்றைக்கே விலகியிருக்க வேண்டியது தானே? சமுதாய மறுமலர்ச்சியே எங்கள் நோக்கம். ஆட்சிக்கு வருவது எங்கள் நோக்கமல்ல.

மணிமாறன்(தென்சென்னை):ம.தி.மு.க., தான் வைகோ; வைகோ தான் ம.தி.மு.க., எங்கள் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை வைகோவுடன் தான் இருப்போம். எங்கள் உயிர் பிரியும்போது தான் வைகோவிடம் இருந்து எங்களை பிரிக்க முடியும். மக்களின் ஜீவாதார பிரச்னைக்காக வைகோ நடைபயண்ம் மேற்கொண்டுள்ளார். அவர் எங்களின் குடும்பத் தலைவராக இருக்கிறார். இப்போது எதிர்ப்பு குரல் எழுப்புபவர்கள் எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு குரல் எழுப்பட்டும்.

மாசிலாமணி (விழுப்புரம்):வைகோவின் தலைமையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களை இழுக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது. அவர்களைப் பற்றி வரும் 25ம் தேதி நடைபெறும் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்வோம்.

மோகன்குமார் (கோவை மாநகர்): கட்சிக்கு எதிராக இரண்டு பேர் பேசுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை. ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் வைகோவின் பின்னால் தான் இருக்கின்றனர். இப்போது இந்தப் பிரச்னை வந்திருப்பதால் நடைபயண்த்தில் கலந்து கொள்வதற்கு அதிகமான தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாங்கள் தேனிக்கு இப்போது கிளம்பிக் கொண்டிருக்கிறோம். வைகோ மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார் என்கின்றனர். போன வாரம் வரை அவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததா? தேர்தல் தோல்வியால் ஒரு கட்சி அழிந்துவிடும் என்றால் தி.மு.க., எப்போதே அழிந்திருக்கும். அ.தி.மு.க., 96ம் ஆண்டு தோல்வியின்போதே அழிந்திருக்கும். இப்போது மட்டும் தி.மு.க.,வுக்கு தனி மெஜாரிட்டி பெற்றிருக்கிறதா? எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனுக்கு அவர்கள் சொந்த மாவட்டத்திலேயே எந்த ஆதரவும் இல்லை. அவர்களுடன் ஈ, காக்கா கூட போகப் போவதில்லை. ம.தி.மு.க.,வை உடைக்க முயற்சிக்கின்னர். இது தி.மு.க.,வுக்கு நல்லதல்ல.

ரத்தினராஜ் (கன்னியாகுமரி):வைகோவுடன் தான் இருக்கிறோம். கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை. கட்சியை விட்டுப் போகிறவர்கள் போகும்போது ஏதாவது சொல்வது இயற்கை தான். அதைத் தான் எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும் செய்கின்றனர்.

நிஜாம்(நெல்லை மாநகர்):கட்சியில் எந்த சலசலப்பும் இல்லை. இதுபோன்ற வயதானவர்கள் கட்சியை விட்டு போவது நல்லது தான். கட்சியில் இருந்தால் சாகும்வரை பதவி கேட்பார்கள். இவர்கள் போனால் தான் எங்களைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வைகோவும் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியும்.

தாமரைக்கண்ண்ன்(சேலம்):எங்கள் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் கட்சிக்கு தலைவர் வைகோ தான். அவர் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். எல்.கணேசனுக்கு எம்.பி., பதவி கிடைத்தபோதும் செஞ்சி ராமச்சந்திரன் மந்திரியாக இருந்தபோதும் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டார்கள். கட்சிக்கு சோதனையான காலகட்டத்தில் கட்சிக்கு கெட்ட பெயர் உருவாக்கப் பார்க்கிறார்கள். நாங்கள் பலனை எதிர்பார்த்து இந்த கட்சியில் இல்லை. பலனை எதிர்பார்த்து இருந்தவர்கள் இதுவரை அனுபவித்தார்கள். இப்போது போகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. அவர்களுக்காக வேதனைப்படுகிறோம்.

ம.தி.மு.க., மாவட்டச் செயலர்களின் கருத்துக்கள் ஒருமித்த குரலில் ஒலிப்பதால் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ள எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் தனித்து விடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி சென்னையில் மாவட்டச் செயலர்கள், உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் ஆகியவற்றை பொதுச் செயலர் வைகோ கூட்டியுள்ளார். சென்னையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிருப்தி குரல் எழுப்பிய எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கட்சியை விட்டு நீக்கும்படி மாவட்டச் செயலர்கள் வற்புறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே வரும் 23ம் தேதி எல்.கணேசன் போட்டி கூட்டம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்துள்ளார். அதில் யார் யார் பங்கேற்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து அதிருப்தியாளர்களுக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கும் என்பதும் தெரியவரும்.

துரைபாலகிருஷ்ண்ன்(தஞ்சை): தி.மு.க.,வில் இருந்த போது புறக்கணிக்கப்பட்டு, அடையாளம் தெரியாமல் ஒடுங்கிக் கிடந்த செஞ்சி ராமசந்திரனும், எல்.கணேசனும் மீண்டும் தி.மு.க.,வில் சேர்ந்து அரசியல் அனாதைகள் ஆகப் போகின்றனர்.


பூமிநாதன்(மதுரை நகர்): வைகோ விசுவாசிகளும், மாவட்ட செயலர்களும் நடைபயண்த்தில் கலந்து கொண்டுள்ளோம். செஞ்சி ராமசந்திரனுடனும், எல்.கணேசனுடனும் ஒரு தொண்டர் கூட செல்ல மாட்டார்.


சண்முகசுந்தரம்(விருதுநகர்): அவர்கள் இருவரும் கருணாநிதியிடம் இரண்டு மாதத்திற்கு முன்பே விலை போய்விட்டனர். அவர்கள் போகிற போது போகட்டும் என்று இவ்வளவு நாளும் காத்திருந்தோம். பொன்.முத்துராமலிங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமை தான் அவர்களுக்கு ஏற்படும்.

மஞ்சனூர் ராமசாமி(கரூர் ): அவர்கள் இருவரும் பதவி சுகத்திற்காக அலைந்து பார்த்தனர். ம.தி.மு.க., வில் அதற்கு வழி இல்லை என தெரிந்ததும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.



செவந்தியப்பன்(சிவகங்கை):
13 ஆண்டுகளாக கட்சியினரின் உழைப்பை சுரண்டிய அவர்கள், இனி எங்கு சென்றாலும் ம.தி.மு.க.,வில் கிடைத்தது போல் முதல் மரியாதை கிடைக்காது. அவர்கள் தான் வைகோவை தூண்டிவிட்டு தனிக்கட்சி தொடங்க வைத்தனர். அப்போதும், இப்போதும் சுயநலத்திற்காக செயல்பட்டுள்ளனர்.

என்.ராமகிருஷ்ண்ன்(தேனி): அவர்கள் வெளியேறுவது எங்களுக்கு முன்பே தெரியும். இனிமேல் தான் ம.தி.மு.க., விற்கு நல்ல காலம். எங்கள் கட்சி இனி மேல் நன்கு வளர்ச்சி அடையும். வைகோவின் உழைப்பிற்கு பலன் கிடைக்கும் காலம் நெருங்கி வந்து விட்டது.

வீரைளவரசு(மதுரை புறநகர்): ம.தி.மு.க., வில் தனி நபர்கள் இருவர் விலகுவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் வராது. வைகோவிற்கு மக்களின் ஆதரவு முன்பை விட அதிகரித்துள்ளதை நடைபயண்த்தின் போது நேரடியாகவே பார்க்க முடிகிறது.

மகாலிங்கம்(நாகை): கட்சியில் பெரியவர்கள் பலர் இருக்கும் போது, நான் தடாலடியாக எந்தக் கருத்தும் சொல்லிவிட முடியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இருவர் விலகிச் செல்வதால், கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு மாவட்ட செயலர்கள் கருத்து தெரிவித்தனர்.

சிவகாசி எம்.பி., ரவிச்சந்திரன் கூறுகையில், வைகோவின் முழு கட்டுப்பாட்டில் தான் ம.தி.மு.க., உள்ளது. பொதுச் செயலர் மீது தொண்டர்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். இருவர் கட்சியை விட்டு செல்வதால், கட்சிக்கு பாதிப்பு வராது என்றார்.

நடராஜன் (திருச்சி மாநகர்): இவர்கள் இரண்டு பேருக்கு உதவுவதற்காக வைகோ அதிகம் கஷ்டப்பட்டார். எது எப்படி இருந்தாலும் 2007ம் ஆண்டு ம.தி.மு.க.,விற்கு எழுச்சி ஆண்டாக அமையப்போகிறது. சுயநல தலைவர்கள் வெளியேறியதால் எந்தக்கட்சியும் அழிந்ததாக வரலாறு இல்லை.

நன்றி தினமலர்

2 Comments:

Blogger பாக்யா... said...

வைகோவுக்கு தெரியும் அந்த 2 நபர்கள் விலகுவதால் மதிமுகாவிற்கு மிக பெரிய இழப்பு என்று
இனி வைகோவின் உண்மைகள் வெளிவரும்...

9:38 AM  
Blogger Jayaprabhakar said...

packiarajan,
இவர்கள் இருவருக்கும் அவர்கள் சொந்த தொகுதியிலேயே, ஆதரவு இல்லை. 1996ல் தனித்து போட்டியிட்ட போது, பல தொகுதிகளில் ம.தி.மு.க. வேட்ப்பாளர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர், மற்ற தொகுதிகளில் டெபாசிட்டாவது பெற்றனர். ஆனால், இவ்விருவரும் டெபாசிட் கூட இழந்துவிட்டனர், என்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.

4:32 PM  

Post a Comment

<< Home