Sunday, September 10, 2006

ஈழ தமிழரை ஆதரித்து வைகோ தலைமையில் பேரணி

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுலமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டனப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

ம.தி.மு.க.சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சென்னை மன்றோ சிலையில் இருந்து இந்த பேரணி புறப்பட்டது. பேரணிக்கு தலைமை தாங்கி ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ நடந்தே சென்றார். அவரை தொடர்ந்து ம.தி.மு.க.தொண்டர்கள் கையில் கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.

ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கறுப்புச் சேலை அணிந்த படி கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் கறுப்பு பாவாடை, கறுப்பு சட்டை அணிந்த படி ஊர்வலத்தில் பங்கு கொண்டனர்.

ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்கும் கோர காட்சிகள் அடங்கிய படங்கள் ஒட்டிய தேர் ஒன்று ஊர்வலத்தில் முன்னதாக அணிவகுத்து சென்றது.

ஊர்வலம் செல்லும் வழியில் ஈழத் தமிழர் படுகொலையைச் சித்தரிக்கும் வகையிலான பதாகைகளும் அதில் "எங்கள் தமிழர் இரத்தம் ஈழத்தமிழர் சிந்தும் இரத்தம்" போன்ற எழுச்சிமிக்க வரிகளும் எழுதப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன.

ஊர்வலத்தில் வைகோவுடன் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன், ம.தி.மு.க. அவைத்தலைவர் எல்.கணேசன், துணை செயலாளர்கள் செஞ்சி இராமசந்திரன், நாசரேத் துரை, மல்லை சத்யா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கம்பம் இராமகிருஷ்ணன், வீர இளவரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியை வாழ்த்தி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசியதாவது:

செஞ்சோலை சிறார்களின் படுகொலையைக் கண்டித்து வைகோ தலைமையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. சென்னையைக் குலுக்கும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றுள்ளது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து உணர்ச்சிப் பெருக்கோடு இந்தப் பேரணியில் பங்கேற்றனர். ஈழத் தமிழர் பிரச்சனை புதுடில்லியில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை வைகோ அவர்கள் சந்தித்துப் பேசியிருக்கும் செய்தியானது தமிழகத் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

டில்லியில் நமது குரலை செவிசாய்க்க யாரும் இல்லை என்ற நிலைமையில் இந்தியப் பிரதமரை வைகோ நேரில் சந்தித்து தெரிவித்திருக்கும் செய்திகள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சரியான நடவடிக்கையாகும்
என்றார் நெடுமாறன்.

இப்பேரணிக்கு தலைமை ஏற்று நடந்து சென்ற் வைகோ தனது கர்ஜனைக் குரலில் எழுப்பிய முழக்கங்கள்:


வெல்லட்டும்! வெல்லட்டும்!
ஈழத் தமிழர் வெல்லட்டும்

எங்கள் இரத்தம்! எங்கள் இரத்தம்!
ஈழத் தமிழர் சிந்தும் இரத்தம்
எங்கள் இரத்தம்! எங்கள் இரத்தம்!

காப்போம்! காப்போம்!
ஈழத் தமிழர்களைக் காப்போம்!

சிங்கள அரசே! கொலைகார அரசே!
சிங்கள அரசே! கொலைகார அரசே!
ஈழத் தமிழர்களைக் கொல்லாதே!
ஈழத் தமிழர்களைக் கொல்லாதே!

இந்திய அரசே! இந்திய அரசே!
இராணுவ உதவி செய்யாதே!

அழியட்டும்! அழியட்டும்!
சிங்கள இனவெறி அழியட்டும்!

இனவெறி அரசே! இனவெறி அரசே
கொலைகார அரசே! கொலைகார அரசே!
கொல்லாதே! கொல்லாதே!
ஈழத் தமிழரைக் கொல்லாதே!

மலரட்டும்! மலரட்டும்!
தமிழீழம் மலரட்டும்!
மலரட்டும்! மலரட்டும்
தமிழீழம் மலரட்டும்!


என்று முழக்கங்களை வைகோ எழுப்ப பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த அவரது தொண்டர்களும் முழக்கங்களை உரத்த குரலில் விண்ணதிர எழுப்பினர்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை ஊர்வலம் அடைந்ததும் அங்கு ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:

தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக இனம் தெரியாத ஒரு உணர்வு உருவாகி வருகிறது. இங்கு வந்திருக்கும் கூட்டம் வாக்கு கேட்கும் கூட்டம் அல்ல. அரசியலில் இலாபம் கிடைக்குமா? என்று வந்த கூட்டமும் அல்ல. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கூட்டம். நான் சாதாரணமானவன். நான் உயிரோடு இருக்கும் வரை தமிழ் இனத்திற்காக பாடுபடுவேன்.

தமிழ் ஈழம் மலர வேண்டும் என்று நாங்கள் பேசுவதால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக கருதுகிறார்கள். தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தமிழ் ஈழத்தில் பிச்சைக்காரர்கள் இல்லை, கற்பு ஒழுக்கம் உள்ளது என்று கூறியிருக்கிறார். இது என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நோட்டீஸ் அடிப்பதற்கு எந்த அச்சகமும் தயாராக இல்லை. துண்டுப்பிரசுரங்கள் அடிப்பதற்கு கூட தயக்கம் காட்டுகின்றனர்.

ஏன் இந்த மிரட்டல்? ஏன் இந்த அச்சுறுத்தல் என்று தெரியவில்லை. எந்த தடையும் உடைத்தெறிய எங்களால் முடியும். தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்கள் பற்றி பேச கூடாது என்பது தான் நோக்கமும், திட்டமும் ஆகும்.

அடக்குமுறைகளினால் அடங்கி ஒடுங்கி போய் விடுவோம் என்று நினைத்து விட வேண்டாம். அது ஒரு காலமும் நடக்காது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஏன் பேசக்கூடாது. பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.

இலங்கை பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். எப்படி பட்ட தீர்வு என்பதை தீர்மானிக்க வேண்டியது ஈழத்தமிழர்கள் தான். அவர்கள் தான் தீர்வு செய்ய வேண்டும்.

பேச்சு வார்த்தைதான் தீர்வு என்று சொல்ல முடியாது. தீர்வை கண்டு பிடிப்பதற்கான வழி முறை தான் பேச்சு வார்த்தை 50 ஆண்டுகளாக அவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள் எல்லாம் அவர்களுக்கு தான் தெரியும்.

எனவே ஈழத்தமிழர்கள் தான் தீர்வு காண வேண்டும்.

தனி ஈழம் என்று உருவானால் தனி தமிழ்நாடு கேட்பார்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.

வங்காளதேசத்தை இந்திரா காந்தி உருவாக்கி தந்தார். இதை போல் தமிழ் ஈழத்தை அவர் உருவாக்கி கொடுத்து இருந்தால் தமிழ் மக்கள் அவரை பராசக்தி என்று வர்ணித்து இருப்பார்கள்.

நான் கேட்கிறேன் வங்கதேசம் உருவாகியதே, மேற்கு வங்காளம் வங்க தேசத்தோடு இணைந்து விட்டதா?, கல்கத்தா டாக்காவுடன் இணைந்து விட்டதா?, கல்கத்தா டாக்காவுடன் இணைய வேண்டும் என்று பேசுகிறார்களா?

தேச பக்தி பற்றி யாரும் எங்களுக்கு சொல்லி கொடுக்க தேவையில்லை. இதற்காக சான்றிதழும் தரவேண்டும் என்ற அவசியமும் இல்லை.

தேசிய ஒருமைப்பாட்டில் எங்களுக்கு அக்கறை உண்டு.

இந்தியாவை நேசிக்கிறோம். இந்தியாவின் ஒற்றுமையை இறையாண்மையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். இதை நான் அச்சத்தால் சொல்லவில்லை. நாங்கள் மன அளவில் ஏற்றுக்கொண்ட கருத்து அது. இந்த நாட்டின் ஒருமைப்பாட்டில் எனக்கு அக்கறை உண்டு.

ஈழத்தமிழர்கள் என்பது வேறு, விடுதலைப் புலிகள் வேறு என்பது தவறு. ஈழத்தமிழர்களை காக்கின்ற அரணே விடுதலைப் புலிகள் தான்.

விடுதலைப் புலிகளை நாங்கள் ஆதரிக்கின்றோம். இதில் நாங்கள் வன்முறையை ஏவி விடவில்லை. தமிழ்நாட்டை நாங்கள் வன்முறை களமாக்க விரும்பவில்லை. உச்ச நீதிமன்றத்தில் பெற்றிருக்கின்ற கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலேயே ஈழ மக்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.

இதை தான் வேளச்சேரி மணிமாறன் பேசினார். நான் குறிப்பிட்டது போல புரட்சிகவிஞர் உணர்ச்சியோடு பேசினார். புரட்சி கவிஞருடைய உணர்ச்சிகளை சொன்னால் நீங்கள் சிறையில் பிடித்து போட்டு விடுவீர்களா? அங்கு வாழும் தமிழர்களுக்காக நாங்கள் ஆயுதம் ஏந்துவோம். அங்கே போய் ஆயுதம் ஏந்துவோம் என்று பேசினார். உணர்ச்சியின் அடிப்படையில் பாரதிதாசன் பாட்டை பாடினாலே நீங்கள் சிறையில் போடுவீர்களா?

நாங்கள் எந்த விதத்திலும் வன்முறைக்கு வித்திட்டவர்கள் அல்ல. வன்முறை மீது காதல் கொண்டவர்களும் அல்ல.

காட்டிக் கொடுக்கிற 5 ஆம் படை துரோகியும் மண்ணின் விடுதலைக்காக போராடுகின்ற ஒரு வீரப்படையின் ஒப்பற்ற தலைவரும் சகோதரர்களா?.

எங்களைப் பொறுத்த வரையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பது அந்த மக்களை பாதுகாப்பதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். 5 லட்சம் தமிழர்கள் யாழ்பாணத்தில் தவிக்கிறார்கள். போர் தான் தீர்வா? பேச்சுவார்த்தை தான் தீர்வா? சிங்கள அரசின் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்.

சிங்கள அரசுக்கு பாகிஸ்தான் இராணுவ உதவி போய் கொண்டு இருக்கிறது. திருகோணமலை வட்டாரத்தில் அமெரிக்க படைகளை கால் வைக்க விடமாட்டேன் என்று இந்திராகாந்தி கூறினார் அல்லவா? அதை போல இந்திய அரசுக்கு கேடு விளைவிக்கின்ற எங்கள் பூகோள அரசியல் நலன்களுக்கு கேடு விளைவிக்கின்ற வகையில் பாகிஸ்தான் இங்கே உள்ளே நுழையக்கூடாது.

பாகிஸ்தான் ஆயுதக் கப்பல்கள் இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க சிங்கள தேசத்திற்கு செல்ல கூடாது என்ற நிலைப்பாட்டை எடுங்கள். இந்த நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இதை கேட்கிறோம். அப்படி ஒரு முடிவுக்கு வாருங்கள். தமிழர்கள் என்றும் உங்களுக்கு துணை நிற்பார்கள்.

இலங்கையில் உருவாகிற தமிழ் ஈழம் இந்தியா அரசுக்கு அரணாக இருக்கும். சிங்களவர்கள் என்றும் நமக்கு கேடு தான் செய்து இருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் இந்தியாவின் அணுகுமுறை வரவேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருப்போம்.

இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் தான் தீர்வு என்பது நாங்கள் 1995 இல் திருச்சி மாநாட்டில் எடுத்த முடிவு அதில் எந்த மாற்றமும் இல்லை. கடைசியாக தீர்வு என்பது தனி ஈழமாக தான் அமையும்
என்றார் வைகோ.

தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கண்டன உரை நிகழ்த்தினர்.

-------------------
பேரணி பற்றிய மற்ற செய்திகளை இங்கே காணவும்.
தினமலர்: http://www.dinamalar.com/2006sep02/political_tn3.asp

0 Comments:

Post a Comment

<< Home